-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Monday 22 June 2009

அரசுக் கல்லூரிகளில் இலவசக் கல்வி: துணைவேந்தர் கோரிக்கை நிராகரிப்பு

புது நிதி ஆதாரங்கள் இல்லாததால், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கும் பரிந்துரையை அரசு நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன், தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தார்.
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்கனவே கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு 30 கோடி ரூபாய் கொடுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்து விடலாம். 500 கோடி ரூபாய் வழங்கினால், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்து விடலாம்' என, ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை அரசு ரத்து செய்துவிட்டாலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். மேலும், பல்கலை, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு செமஸ்டரின்போதும் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வுக்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பரிந்துரை ஏற்கப்பட்டால், மாணவர் சமுதாயம் பெரிதும் பயனடையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. புதிய நிதி ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் இப்பரிந்துரையை ஏற்க முடியாது என, அரசு தரப்பில் தெரிவித்துவிட்டதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மலேசியாவில் பல ஆயிரம் தமிழர்கள் தவிப்பு !

போலி ஏஜன்ட்கள் மூலம் செல்லும் இவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் அனுப்பப் படுகின்றனர். தாங்கள் எந்த விசா கொண்டு வந்தோம் என்பது கூட தெரியாததால், விசா காலம் முடிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பணிபுரியச் செல்லும் நிறுவன ஒப்பந்தத்தின் விவரத்தையும் யாரும் பார்ப்பதில்லை. மலேசிய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை, முழுமையாக கொடுக்காமல் சில ஏஜன்ட்கள் ஏமாற்றுகின்றனர். இதனால், மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், சிலர் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
அவர்களை, அந்நாட்டு போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். இப்படி, மலேசிய சிறைகளில் 3,600 தமிழர்களும், முகாம்களில் 2,400 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தோட்டம், கடைகள், கோழிப்பண்ணை, ஒயின் ஷாப் என பல இடங்களில் வேலை செய்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கலில் மாட்டிய பெண்கள் பலர், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டில், தலை மறைவாக இருந்த வெளிநாட்டினருக்கு மலேசிய அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. பொது மன்னிப்பு வழங்கப்படுபவர்களின் விமானச் செலவு, அவர்கள் மீண்டும் தங்கிவிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் எத்தனை பேர் தலைமறைவாக தங்கியிருக்கின்றனர் என்ற விவரம் என பல சிக்கல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.இந்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால், பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க மலேசிய அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது. இத்தருணத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லும் என, மலேசிய வீதிகளில் பல தமிழர்கள் சுற்றித் திரிகின்றனர்.அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகும் தமிழர்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகமும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மலேசிய தமிழர்களின் நலன்கருதி, காமன்வெல்த் சமரச தீர்ப்பாயம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு அங்கு சென்று விசாரனை மேற்கொண்டது. அந்த அமைப்பின் தெற்காசிய தலைவரும், வக்கீலுமான செல்லம் பாரிமன்னன் கூறுகையில், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், உதவிக்காக அளித்துள்ள தொலைபேசிஎண்களை ஏழு நாட்களாக தொடர்பு கொண்டும், யாரும் முறையாக பதிலளிக்க வில்லை.
மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் காந்தாவை நாங்கள் சந்தித்தபோது, "சட்ட விரோதமாக இங்கு வாழும் தமிழர்களுக்கு நாங்கள் உதவ முடியாது' என்றார். இந்த விஷயத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மிரண்டு போனதும் மீண்டு வந்ததும்!:சென்னை நந்தனத்தில் இருந்து செயல்பட்ட போலி நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட, நாகப்பட்டினம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது:பணிக்கான விசா மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேர் கொண்ட குழுவில், 90 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, நானும் போனேன்.
எங்களை அனுப்பிவிட்டு ஏஜன்ட் சென்றுவிட்டதால், மலேசியா ஏர்போர்ட்டில் எங்களை அழைத்துச் செல்ல, அங்குள்ள ஏஜன்டுக்காக காத்திருந்தோம்.பத்து நாட்கள் வரை அவர் வராததால்,மொழி தெரியாத நாட்டில் சாப்பாட்டிற்கு வழி தெரியாமல் தவித்தோம்.பிறகு வந்த ஏஜன்ட் மூலம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். சம்பளம், வேலை நேரம் எல்லாமே, ஏஜன்ட் சொன்னதற்கு மாறாக இருந்ததால் மிரண்டு போனேன்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவாவது சம்பாதிக்க வேண்டுமே என நினைத்து, பல இடங்களில் வேலை செய்தும் வட்டியை மட்டுமே கொடுக்க முடிந்தது. வேறு வழி இல்லாமல், ஒரு வழியாக நாட்டிற்கு மீண்டும் வந்து விட்டேன்.என்னைப் போன்று பல ஆயிரம் பேர், திரும்பி வரக்கூட பணம் இல்லாமல் அங்கு தவிக்கின்றனர்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

Wednesday 3 June 2009

இலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு


புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு:

+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929)

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும் தமிழுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருக னாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்--7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003



முனைவர் இரா.திருமுருகனார் முகவரி:

முனைவர் இரா.திருமுருகனார்
ஏழிசைச்சூழல்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி-605 001
பேசி : 0413- 2334391

இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம்

லேபிள்கள்: pondicherry, puducherry, புதுச்சேரி, முனைவர் இரா.திருமுருகனார்

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா