-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Saturday 20 September 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன்

கண்ணதாசன் ரசித்த கம்பன்
(பிரான்சுக் கண்ணதாசன் கழகம,; பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும் பெரு நகரில் 22.06.08 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றிய சிறப்புரை.)

வானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும் நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்
தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்; திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!
ஏனெனில், கண்ணதாசன் - காவியத் தாயின் இளைய மகன், காதற் பெண்களின் பெருந்தலைவன்! அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை! எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை! கால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்!
மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!

அந்தக் கண்ணதாசன் திரைப்படத் துறையில் கால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்
பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார், பாபநாசம் சிவன். முத்து முத்தான கருத்துகளைச்
சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..
இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்த இக்கவிஞன், தான் படித்துச் சுவைத்திருந்த பைந்தமிழ் இலக்கியங்களை, வைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,
கருத்துக் கருவூலங்களைத் தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.
பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன் நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது. பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது. அதைப் போலத்தான் கண்ணதாசன் என்னும் மேகம் தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத் தன் பாடல் வரிகளில் எளிய மொழியில் மழையாகப்
பொழிந்து தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக, இப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு கைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!" பாட முடிகிறதா, பாடினாலும் பொருள் புரிகிறதா...புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா! படித்திருக்கும் உங்களுக்குப் புரிந்தாலும் ஏட்டையே தொட்டிராத ஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா! பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது! அவர் பாடல்களும் கடல்தான்! அந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்த கண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது. மூலக்கருத்து சிதையாமல் பாலொடு தேன் கலந்தது போல்
பொருத்தமான சொற்களால் மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ!
கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்! படியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்! இதுதான் கண்ணதாசன்!இலக்கிய வரிகளை, கருத்துகளைத் தன் திரைப்படப் பாடல்களில் கலக்கிக் கொடுத்த கண்ணதாசனுக்குக் கம்பன் மேல் தணியாத காதல்!
கம்பன் மேல் கரைகடந்த காதல் கொள்ளாத கவிஞன் எவனுண்டு!

கம்பனைப் பாட வரும் கண்ணதாசன், 'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி
வைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு' என்று பாடுகிறான்!
இந்தக் கண்ணதாசன், கம்பதாசனாகி ரசித்த கம்பன் வரிகள் சிலவற்றைக் காண்போமா -
தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில் நிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்! இந்தக் கம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை! - இதில்
சொம்பள்ளிக் குளித்தாலும் சுகமாக நீந்திக் களித்தாலும் கிட்டுகின்ற இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை! வ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும் அறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும் மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் ூழ்கியவர்கள்தாம்! தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்!
இந்த வரிசையிலே முந்திக்கொண்டு வந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ, கம்பன் பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.
கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகி கம்பன் அமுதை அள்ளிப் பருகி
உள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம் கள்வாங்கிய திரைப்படப் பாடலாக
மாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தே போற்றி வருகிறது! ஏனெனில்
கம்பன் என்ற பெயரே கொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!
'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்
"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.
ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா! எனக் கேட்டு நமக்குள்
எல்லை இல்லா இனபம் ஊட்டும் கவிஞர்,
என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :
'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன் காதலியைக் காணும் கவிஞருக்கு யாருடைய சீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!

கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்! ஏன் தெரியுமா?கம்பன் என்றொரு மானிடன்
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்
போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!
கண்ணதாசனின் வரிகள்- மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும் மாணிக்க அரிகள்!
அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,
'என்ன சொல்லி என்ன பாடக்
கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்
'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும் இன்னும் பல இடங்களிலும்

கம்பன் பெயரை வைத்திழைத்தே செம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப் படைத்திருக்கிறார் கண்ணதாசன்!கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச் சான்றுகள் அல்லவா, இவை!

இதோ, கண்ணதாசன் ரசித்த கம்பன் -கம்பீரமாய் வருகிறான் உண்ணத் தெவிட்டாக் கனியமுதாய்த் தமிழமுதைத் தருகிறான்! எங்கிருந்து தொடங்க? கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்! தொட்ட இடமெல்லாம் சுவைப்பவை கடித்த இடமெல்லாம் - இல்லை, இல்லை
படித்த இடமமெல்லாம் இனிப்பவை! எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை! என் சிறப்புரையில் சொல்லாத -அண்மையில் எழுத்துக்கூடத்தில் வெளி வந்த நன்றி :சத்தியா - நிலா முற்றம். என்ற கட்டுரையில் இடம் பெற்ற
" காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்னும்
பாடலில் இருந்தே தொடங்கலாமா? திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்
தவழ்ந்து வரும் தென்றலாய்க் காற்றினிலே வரும்; இந்தக் கீதத்தில் கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும் இதன் ஆசிரியர்,

" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்) இலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்
சென்று விடுகிறார்.
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்".... என எழுதுகிறார். உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச் சிறப்பின் உச்சிக்கு வைரமணி வரிகளுக்குக் காரண கருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம். இதோ, கம்பனின் காவியம் விரிகிறது அதில் கண்ணதாசன் ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள் வாருங்கள், வந்து பாருங்கள் :கம்பன் காலம் -
மூவருலா, விக்கிரம சோழனுலா... என உலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!
தன்னேரில்லாத் தலைவன் வீதிவாய் உலா வருகிறான்.; பேதை முதல் பேரிளம் பெண்கள்
ஈறாக உள்ள எழுபருவத்துப் பெண்கள் மாரன் கணை தொடுக்க, தலைவனைக் காண்பதற்கு
வந்து குவிவார்களாம். இதனை நேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே உலாவாகும்
இப்புதுவகை இலக்கியத்தில் மனத்தைப் பறிகொடுத்த கம்பன் தன் காவியத்திலும் இதன் கூறுகளைத் தொடுகிறான்.உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவை பலாப்பழச் சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச் சீதை கரம் பிடிக்கச் சீராமன் வீதிகளில் வலம் வருகிறான். மாவீரன் வரும்போது மலர் தூவி வரவேற்பது முறை அல்லவா! அப்படியே
இங்கும் இராமனை வரவேற்கும் மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்கவில்லையாம்!
மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும் பெண்களைப் பற்றிப் பேசும் இப்பகுதி காதல் பெண்களின் பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில் வியப்பில்லைதான்! மான் இனம் போல, மயில் இனம் போல மீன் இனம் போலக் குவிந்த மகளிர்தம் மனநிலைகளை - கண்ணினால்
காதல் என்னும் பொருளையே காணும் உடல், உள்ள நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல் இலக்கியச் சுவையின் உச்சியாய் விளங்கும் ஒரு பாடல் கண்ணதாசனைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது. கன்னித் தமிழெடுத்த கம்பன்
தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி : அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி இன்னலம் தெரியவல்ல ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!
மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல் கொண்ட அவள் உலா வரும் இராமனின் அழகு நலமெலாம் கண்டுகண்டு நெக்கனள்;, உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள்:
"நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்எனும் புலங்கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன் தனக்குச் சொந்தமாக்கி;க் களிக்கிறார். தனக்கே உரிய செந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:
"கண் திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண் திறந்தால் போய் விடுவார்
கண் மூடிக் காத்திருப்பேன்"....

கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில் லயித்தவர் அவற்றையே தமதாக மாற்றி
நமக்குள் தமிழ்த் தேனை ஊற்றி அவர் வரிகளில் நம்மை லயிக்கவும் ரசிக்;கவும் செய்துவிடுகிறார் நம் மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார் கவியரசர் பட்டத்தை எய்துவிடுகிறார்.

கம்பன் காட்டும் கன்னி கண்ணுள் நுழைந்த கள்வனைக் கண்ணால்; சிறைசெய்து
நெஞ்சச் சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை அந்தப் பஞ்சவண்ணக் கிளி!
தன்னையும் அவனையும் பள்ளி அறையில் கொண்டு போய்ச் சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள். கண்ணதாசனின் கன்னியோ கண்மூடிக் காத்திருப்பேன் எனக் காத்திருக்கிறாள்.
அவனுக்காகவே அவள் பூத்திருக்கிறாள்.
கம்பனின் உலாவியற் படலத்தில் இது போலப் பல பாடல்கள் இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக் இட்டுச்செல்லும் இனிய ஆடல்கள்!

பருவப் பெண்கள் இராமனின் அழகு நலன்களை எல்லாம் பகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப் பருகுகிறார்கள்! திருமேனி அழகைத் தீண்ட முடியாமல் உருகுகிறார்கள்!உதித்த சூரியனாய் உலா வரும் அவன் மேனியில் பதித்த இடத்திலிருந்து பார்வையை மீட்க முடியவில்லையாம்!
வாள்கண் நங்கையர்தம்; கண்கள் ஆடவர்கள் மேல் முதலில் பாயும் இடம் தோள்களாம்! பல இடங்கள்pல கம்பன் சொல்கிறான். பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்
இராமன் செல்கிறான் அவன் மேல் சீதைதன் பார்வையைப் பதிக்கிறாள் தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறாள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! கண்ணொடு கண் இணைகிறது.
நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது. உயிரோடு உயிர் பிணைகிறது! அச்சமயம், சீதையின்
நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை ஆக்;கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன.
இது போன்ற இன்னொரு காட்சியைக் கம்பன் உலாவியற் படலத்தில் காட்டுகிறான் :
உலவி வரும் நிலவு என வீதியில் உலவி வரும் இராமனின் அழகு
நலன்களைக் காணும் சிலபெண்களின் கண்கள் அவன் தோளில் ஆழ்கின்றன.
சிலபெண்களின் கண்கள் அவன் தாளில் வீ;ழ்கின்றன.
"தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!"
கம்பனைத் தவிர வேறெந்தக் கொம்பனும் வரைய முடியாத காவிய வரிகள்!

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள் மலைத்துப் போகும்! நிலைகுலைந்த நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்! இராமனின் தோள் சேரும் பேறு சீதைக்கு மட்டுமே என்றாலும் வாராதோ தங்களுக்கும் அப்பேறு என்ற ஏக்கம்! விளைவு? பதிந்த இடத்தை விட்டு நகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப் பகர முடியாத மொழிகள்!
புவனமே புரண்டெழுந்து வந்தாலும் அவர்கள் கவனம் என்னவோ அவனின் தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் : கல்லையும் பெண்ணாய்க் கனியவைத்தனவாமே காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போது தங்களையும் அப்படிச் செய்யுமா, தங்கள் வாழ்வும் விமோசனம் பெற்று உய்யுமா? பாவப்பட்ட பெண்கள் அங்கே
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தாள் கண்டார் தாளே கண்டார்!

தோளையும் தாளையும் தனித்தனியாய் நோக்குறும் கன்னியர் பற்றிய வரிகள்
கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்துவிடுகின்றன! என்ன அற்புத வரி இது :
“தோள் கண்டார் தோளே கண்டார்”! ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது!
இப்படியான அற்புத வரியை எப்படியாவது பயன்படுத்த விழைகிறது!
படித்துச் சுவைத்து லயித்து ரசித்த சொற்களை அப்படியே இழைத்து வைக்க
நல்லதொரு வாய்ப்பும் வருகிறது! திரைப் படம் : இதய கமலம்
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”

தாளை வாளாக்கிக் கம்பனின் வார்த்தைகளைத் தன் பாடலில் வார்த்தெடுக்கும் வித்தை கண்ணதாசனுக்குக் கைவந்த கலை இல்லை, இல்லை… கவிதை தந்த கலை!
எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை
வாரி வழங்கிய வள்ளல் கம்பன்.கைவண்ணம் கால்வண்ணம் என்று அவன் சொன்ன
வண்ணம் கண்டு கேட்டு ரசித்த கண்ணதாசனும் அவ்வண்ணமே பல வண்ணங்களைப் போட்டுப் பாடலாக்கி நாம் மகிழும் வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன் முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?
விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்க விசுவரூபம் எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை துடித்த புருவமும் எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி! இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!

இறுதியில், இராமன் தன் சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் விடுகிறான்.
அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத் துளைத்துப் புறம் போகிறது அந்த இராம பாணம் -
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல! கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில் காட்டிய வீரம் கண்டு மகிழ்ச்சி கொண்டு பெரிய முனிவனும் அரிய படைக்கலன்களை வழங்கினான். பின்னர், முனிவன் முன் செல்ல அண்ணலும் அவன் தம்பியும் பின் சென்றனர் - மிதிலை நோக்கி! வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது இராமனின் பாதம் அதனைக் கடந்தது கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ அற்புதம் ஒன்று நிகழ்ந்தது.
பெண்ணமுதாய் அது மாறி நின்றது! அன்னையே அனையாட்கு நிகழ்ந்தது என்னை என இராமன் கேட்கிறான்.கவுதம முனிவனின் கைப்பிடித்தவளை அகலிகை எனும் பெயர் படைத்தவளை விழியால் காதல் கதை பேசி நவ்வி போல் விழியாளை வீழ்த்திய இந்திரன் கதையை முனிவன் கூறக்கேட்டான். "நெஞ்சினால் பிழைப்பு இலாள்' என
நீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;; தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு
மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன் பாடுகின்றான் வியப்பின் எல்லையில் நின்று "மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலே கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க
வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!
பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.
படம் : பாசம்
இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?
இல்லை, இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும்
பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல.
அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை.காட்டாக,கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தனா என்று பாடிய இராமச்சந்திரக் கவிராயர் பாடலைப்
போல அமைந்ததுதான், பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட
பாடல் :
"அத்தான், என்னத்தான் அவன்
என்னைத்தான் எப்படி சொல்வேனடி..".
'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும்,
'அத்திக்காய் அத்திக்காய்
ஆலங்காய் வெண்ணலவே..' பாடல் எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல்
திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..." என்ற
வெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டுமென்றே கொண்டுவரவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும். இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட கம்பனின் பாடல்களைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். அல்லது கேள்வியாவது
பட்டிருக்கலாம். இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!
வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.
'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடலதான் அது. அதில் இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!
எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?...
தேடுங்கள், கண்டடைவீhகள்.
கண்டவர்கள் விண்டிடலாம.; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும்.
கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா?
சென்ற முறை, வியட்நாம் வீடு என்ற படத்தில் வரும் 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் வரும் 4 வரிகளையும் சொல்லி அவை கம்பன் பாடலின் அடியொற்றி எழுதப்பட்டவை, கம்பனின் அவ்வரிகளை யாரேனும் சுட்டிக்காட்ட முன் வாருங்கள் என அழைப்பும் விடுத்திருந்தேன். இது வரை எவரும் அதற்கு விடை தரவில்லை. அதனால் பாதகம் இல்லை, தவறும் இல்லை! ஏனெனில், கம்பனை ஆழமாகப் படித்தவர்களும் அறியாத, அறிந்தும் பொருட்படுத்தாத பாடல் இது!. இனி நம் தொடரைத் தொடர்வோம்.
"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்"

எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத் தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும். தம் திரைப்படப் பாடல்களில் இவர் இவற்றை இழைத்திருக்கும் பாங்குகளைப் பலரும் இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.

(காண்க : நிலாச்சாரலில் கண்ணதாசன் பற்றிய சக்திதாசன் கட்டுரைகள், திண்ணையில் அப்துல் கையூம் கட்டுரை, - நிலா முற்றத்தில். சத்தியாவின் கட்டுரை...).
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு. கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன் உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
கம்பனின் காவிய வரிகள் இதோ :
"பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!"

சூர்ப்பணகை - மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள்.

அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான். 'பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான்
பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான்.மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!'எனச் சூர்;ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழு;ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது.

கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு 'எங்கனம் வைத்து வாழ்தி!' என்ற வரியில்
கீழறைப்பொருளை (னசயஅயவiஉ சைழலெ) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது.

கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது! ரசிகமணி டி.கே.சியோ,
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோ பேராசிரியர் அ. ச. ஞானசபந்தமோ கூட
எங்கேயும் எடுத்துக் காட்டாத கவிதை இது! எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து
' ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்." என்று
முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

கம்பனின் வைரமணி வரிகள் பல
கவிஞர் கண்ணதாசனின் நெஞ்சைக் கவர்ந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றிக் கவிஞரே 'நான் ரசித்த வர்ணனைகள்" என்ற
தம் நூலில் குறிப்பிடுகிறார். அவர் ரசித்த அந்தப் பாடல் -
பலரும் ரசித்த பாடல்! கம்பனின் தலைசிறந்த பாடல் வரிசையில் இடம் பெற்ற பாடல்.
எந்த அளவுக்கு இந்தப் பாடல் கவிஞரின் நெஞ்சைக் கவர்ந்தது என்றால்,
அப்பாடல் வரி ஒன்றை அப்படியே தன் பாடலில் பதிந்து வைத்துவிட்டார் கவிஞர்.
அந்த வரியைப் பாhக்குமுன் கம்பனின் கவிதை வரிகளைக் கண்டு
படித்து ரசித்து வருவோம் , கண்ணதாசன் ரசித்ததைப் போல.

என்னையே நோக்கி யான் இந்நெடும்பகை கொண்டது எனத் தன்னையே தருக்கி நின்ற இராவணன்,
'வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையொடு மீண்டு'
'சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பிய' இராவணன் மண்ணின் மீது மாண்டு கிடக்கிறான் - மனைவி மண்டோதரி ஓடோடி வந்து அவனைக் கண்டு புலம்பி அழுகிறாள்.

பெற்ற மகன் இந்திரசித்துவின் தலை அற்ற உடலைக் கண்டழுது ஒப்பாரி வைக்கும் போது
கொற்றவன் இராவணனுக்கும் நாளை இந்தக் கதிதானே என ஒப்பிலாத் தன் கணவனை நினைத்து அப்போதே ஒப்பாரி வைத்து அழுதவள் அவள். அதனைக் கம்பன்
"அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ!" என
அவள் அரற்றுவதாகப் பாடுவான்.

மகன் மரணத்திலேயே மணாளனின் மரணத்தைக் கண்டு உருகிப் பாடிய மண்டோதரி
கணவனின் உடலைப் பாhக்கிறாள் கண்ணீரும் கம்பலையுமாகத் தன் உள்ளத்து
உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள். வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்தத் திருமேனி எள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
; உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!
இராம பாணம் இராவணன் உடலைச் சல்லடைக் கண்களாய் துளைத்திருக்கிறதாம்!
(இக்காலத்து யுமு 47 துப்பாக்கி போல). ஏன்? ஏன்? ஏன்?
காரணத்தைத் தேடும் மண்டோதரியன் மனம் பெண்மைக்கே உரிய (கநஅiniநெ டழபiஉ)
தோரணையோடு பேசுகிறது : அமுதால் செய்த நஞ்சாம் சீதை மேல் வைத்த
முறையற்ற அறமற்ற காதல் எங்கே இருக்கிறது எனத் தேடிக் கண்டுபிடித்து அதனை வேரோடு கல்லி எறியவே இராவணன் உடலைப் பாணம்
சல்லியாகத் துளைத்துவிட்டிருக்கிறது. துளைக்கப் பட்ட உடல் எப்படிப் பட்ட உடல்?
இளைத்துப் போன உடலா அது? இறைவன் இருக்கும் இமயத்தையே
பெயர்த்தெடுக்க முயன்ற உடல் அல்லவா! அதனாலேயே சாதாரண அவன் மேனி
திருமேனி ஆன உடல் அல்லவா?
(திருமேனி என உடலை அழைப்பது வைணவ மரபு, இராவணன் சிவபக்தன், ஆகவே அவன் உடலைத் திருமேனி என வைணவ மரபுப்படி அழைப்பது தவறாகும். ஆனால் கம்பன் அப்படித்தான் அழைக்கிறான் மண்டோதரி வாயிலாக! கைலாய மலையை அவன் தீண்டிய காரணத்தால் அவன் மேனி திருமேனி ஆனது என்ற கருத்துப்படத்தான் கம்பன் அப்படிக் கூறி இருக்கிறான்).
சிவனைக் குறிப்பிட எத்தனையோ வர்ணனைகள் குறியீடுகள் உண்டு.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ' வெள்ளெருக்கஞ் சடைமுடியான்" எனக் கம்பன் குறிப்பிடுகிறானே, ஏன்? யாருமே விரும்பாதவற்றைத் தான் விரும்பி ஏற்பவன் சிவன் - அமுதைப் பிறர்க்கு அளித்துவிட்டு நஞ்சைத் தானருந்திய திருநீலகண்டன் அல்லவா அவன். பட்டையும் பீதாமபரத்தையும் பிறர்க்குத் தந்துவிட்டுத் தான் மட்டும் மான் தோலையும் யானைத் தோலையும் புலித்தோலையும் உடுத்துகின்றவன் தானே அவன். அது போலவே, வண்ண மலர்களை, வாசப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு யாரும் சூட விரும்பா எருக்கம் பூவைத் தான் சூடிக்கொண்டவன். இப் பூவில் கண்ணைக் கவரும் வண்ணமோ கருத்தைக் கவரும் கள்ளோ (தேன்) இல்லை! பிறரைக் கவரும் ஆற்றலும் இந்தப் பூச்சூடிய சடைக்கும் இல்லை! அதனால்தான் போலும் இராவணன் அங்கே தன் வீரத்தை வலிமையைக் காட்டி மேரு மலையைத் தோளில் எடுக்க முனைந்தான். இப்போது இவற்றுக்கு நேர் மாறான முரண்தொடையை அமைக்கிறான் கம்பன். கள்ளோடு கூடிய அழகிய வண்ண மலர்களைச் சீதையின் கூந்தலுக்குச் சூட்டுகிறான், "கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்' என்று. மயக்கம் தருவது கள். அந்தக் கள் உள்ள மலர்களைச் சூடிய சீதை மீது மாளாத மயக்கம் கொண்டான் இராவணன். அழகு தருவது கூந்தல். அதனால் அழகெனும் அழகுமோர் அழகு பெற்ற சீதை மேல், கள்ளொடு கூடிய பூச்சூடிய கூந்தலை உடைய சானகி மீது அடங்காக் காதல் கொண்டான் இராவணன். இவ்வளவு கருத்தழகுகளைப் பொதிந்துள்ள இந்தக் கவிதை கண்ணதாசன் மனத்தைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பிலலை. அதிலும் ' கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி' என்ற வரி கண்ணதாசனைப் பெரிதும் ஈர்த்துவிட்டது. பல திரைப் பாடல்களில்;, கம்பன் கருத்தை உள்வாங்கித் தன் வயமாக்கி தன் சொற்களில் வழங்கிய கண்ணதாசன் இந்த வரியை மட்டும் அப்படியே தன் பாடலில் பொதிந்து வைத்துவிடுகிறார், தங்கஅணிகலனில் வைரமணியைப் பதிப்பது போல :
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி".

எந்தப் படத்தில், என்ன இடத்தில் இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல் என்ன... பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்.
இனி,கம்பன் சொற்களையும் கருத்துகளையும் கலந்து கண்ணதாசன் எழுதிய பாடல்
ஒன்றைக் காண்போமா...

கம்பனில், கவியரசர் திளைத்து ரசித்த பகுதிகள் பலவற்றையும் பார்த்து வரும் வேளையில், விதி பற்றிய பாடல் ஒன்றை அவர் பெரிதும் ரசித்திருப்பதைக் காண முடிகிறது.
பாடல் இடம் பெற்ற படம் : படம் : தியாகம்

பாடல் வரிகள் :
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றமின்றி
வேற யாரம்மா!
சிறப்பான இந்த வரிகளுக்குப்
பிறப்பெடுத்துக் கொடுத்தவை
கம்பனின் காவிய வரிகளே!

முடிசூட்டல் இராமனுக்கே என முடிமன்னன் தயரதன் முடிவுசெய்கிறான்.
செய்தி கேட்டு வெகுண்டெழுகிறாள், மனமுடைகிறாள்
'தீயவை யாவினும் சிறந்த தீயாளா'கிய கூனி.
கைகேயி அரண்மனையை அடைகிறாள்.
அஞ்சுகம் எனப் பஞ்சணையில் படுத்துறங்கும் அவளை உலுக்கி எழுப்புகிறாள்.
அவளைச் சீண்டுகிறாள் வரம் ஒன்றினால் இராமன் காடேகவும் மற்றதனால்
பரதன் நாடாளவும் மன்னனிடம் கேட்குமாறு தூண்டுகிறாள்.
இருவருக்கும் இடையே வாதம், விவாதம் தூள் பறக்கின்றன!
இறுதியில் - திண்ணிய நெஞ்சினளாகிய கூனி மந்தரை வந்த வேலையை
எண்ணிய காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாள். தேவி தூய சிந்தையும் திரிகிறது.

முடிசூட்டல் இல்லை இராமனுக்கு எனக் கேட்ட இளவல் இலக்குவன் காலத் தீ எனக் கொதிக்கிறான் "சிங்கக் குட்டிக்கு ஊட்ட இருந்த தீஞ்சுவை ஊனை நாயின்
வெங்கண் குட்டிக்கு ஊட்ட நினைத்தனளே கைகேயி! என்னே அவள் அறிவின் திறம்" என்று சீறி வானுக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறான் :சொன்ன சொல்லை மாற்றிவிட்ட
மன்னவனைத் தந்தையாக எண்ண அவன் மனம் ஒப்பவில்லை!
"சூட்டுவேன் இராமனுக்கே முடி நான் யாரெனக் காட்டுவேன். இதற்குத் தடையாக அந்த
மூவருமே வந்தாலும் சரி தேவருமே வந்தாலும் சரி யாவரையும் அழித்தொழிப்பேன். இதனைத் தடுப்பவர்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்"

தம்பியின் தனி ஆவேசக் குரல் கேட்டு நம்பியும் ஓடோடி வருகிறான்.
"இதுவரை எவரையும் சொல்லால் சுடாத தம்பியே இது என்ன புதுக் கோலம்,
ஏனிந்தக் கோபம்?" இனிய சொல்லெடுத்து இராமன் கேட்க
"வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"
இலக்குவன்.
(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)


இந்தப் பாடலைக் கம்பன் அமைத்திருக்கும்
ஓசை நயத்தோடு படித்துப்பாருங்கள்.
கூற்றம் எனக் கொதிக்கும் இலக்குவனின் சீற்றமும்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதிக்கும் அவன் தோற்றமும்
கண்முன்னே தெளிவாகத் தெரியும்!
அவன் கோப மன நிலை புரியும்.

அவனை இராமன் அமைதிப் படுத்துகிறான்.
இலக்குவனின் கோபத் தொனிக்கு மாறாக
இராமனின் குரலொலிக்கிறது :

"நதியின் பிழையன்று நறும்புன லின்மையற்றே
பதியின் பிழையன்று பயந்துநமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைநீயிதற் கென்கொல் வெகுண்டதென்றான.;"

இந்தப் பாடலையம் இந்தச் சந்தத்தோடு படித்தால்
இராமனின் சாந்தத்துக்கு ஏற்பக் கம்பன் சந்தம் அமைப்பதை உணரலாம்.
(கம்பனின் பாடல்களில் எல்லாம் அந்த அந்தச் சூழ்நிலை, பாத்திரங்களின்
தன்மைக்கு ஏற்பவே சந்தங்கள் அமைந்திருக்கும்.
எனவே கம்பனின் கவிதைகளை ரசிக்க விரும்வோர்
அவற்றை வாய்விட்டு உரிய சந்தத்தோடு படித்தல் வேண்டும்.
அப்போது தான் கம்பனை முழுமையாக உணர முடியம் ரசிக்கவும் முடியும்!).
கவியரசர் இப்படித்தான் கம்பனை ரசித்திருப்பார்.
அதனால் தான் இந்தப் பாடல் வரிகளையும் கருத்துகளையும்
தன் திரைப் பாடலில் பக்குவமாய் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

கண்ணதாசன் பாடல்களுக்கு
விரிவுரையோ விளக்க உரையோ
பதவுரையோ பொழிப்புரையோ தேவை இல்லை!
மாறாகக் கம்பன் பாடல்களைப் படிப்பதற்கும்
பொருள் உணர்ந்துகொள்வதற்கும் பயிற்சி தேவை!
அதனால்தான் இக்கட்டுரைகளில்
கம்பன் கவிதைகளுக்குச்
சுருக்கமான விளக்கம் தேவை ஆயிற்று.
இனி,கம்பன் பாடியதாகக்
கண்ணதாசன் உட்படப் பலரும் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கும் பாடல் வரி ஒன்றைச் சொல்லி
அதனைக் கண்ணதாசன் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி
அது போலவே
கம்பன் காட்டாத காட்சி ஒன்றைக்
கம்பன் காட்டி இருப்பதாகக் கருதிக்
கண்ணதாசன் எழுதிய வரிகளைக் கூறி
இந்தக் கட்டுரைக்கு மங்களம் பாடிவிடலாம்.

முடிப்பதற்கு மனம் வரவில்லை! இருந்தாலும் முடிக்கத்தானே வேண்டும்.
முடிப்பதற்கு முன்பாக ஒரே ஒரு பாடலை மட்டும் நீங்கள்
படிப்பதற்குத் தரவா...படிப்பதற்கும் ரசிப்பதற்கும் இனிய பாடல்!
'நடையா! இது நடையா! ஒரு நாடகம் அன்றோ நடக்குது!' என எழுதிய கண்ணதாசனை இந்தப் பாடல் ஈர்த்திருக்கிறது. ஏனெனில் இதிலும் ஒரு நாடகம் நடைபெறுகிறது - வசனம் ஏதும் இல்லாமலே! இதுவும் நடையைப் பற்றியதுதான்.
இரண்டே இரண்டு பாத்திரங்கள் -
இராமனும் சீதையும் தனிமையில்
காடு தரும் இனிமையில்
சுற்றிலும் செடிகொடி சூழ அமைந்த சுனை.
அங்கேதான் கொடி கட்டிப் பறக்கிறது கம்பனின் கற்பனை!
ஒதிமம் (அன்னம்) ஒன்று அப்பக்கம் ஒதுங்கக் காண்கிறான் இராமன்.
கண்டவன் முகத்தில் குறும்பு முறுவல் ஒன்று களிநடம் புரிகிறது.
அன்னத்தை நோக்கியவன் அருகில் வரும்
சீதைதன் நடையை நோக்கினானாம். நோக்கிப் பின்;
சிறியதோர் முறுவல் செய்தானாம்!
கொண்டவனின் கண்களைக் கண்டே அவன்
எண்ணத்தை அறிந்துகொள்ளும் கற்பூர அறிவு சீதைக்கு!
கண்ணாளன் கண்ணாலேயே எழுதிய கவிதை வரிகளுக்குப்
பெண்ணவளும் தன் கண்ணாலேயே பதில் கவிதை தீட்டிவிடுகிறாள்
நம் நெஞ்சில் தமிழ்த் தேனைக் கூட்டிவிடுகிறாள்.
' மாதவள் தானும் ஆண்டுவந்து நீருண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்."
எனக் கம்பனும் தன் கற்பனை வளத்தைக் காட்டிவிடுகிறான்.
இத்தனைக்கும்
இருவருக்கும் இடையே
இல்லை ஒரு வாய் பேச்சு!
இருந்தது என்னவோ கண்வீச்சு!
மின்னின் இளைத்த இடை
கொண்ட சீதை நடை
அன்னத்தின் நடை போல என இராமன்
சொல்லாமல் சொல்லி விடுகிறான்
தன் குறும்புப் புன்னகையால்.
அவனுக்குச் சமமாகப் பதிலடி தருகிறாள், இல்லை, இல்லை,
பதில் வரி தருகிறாள் சீதை, அதே குறும்பு கொஞ்சமும் குறையாமல்,
அங்கே வந்து நீருண்டுத் திரும்பிச் செல்லும் யானையைப் பார்த்துப்
புதியதோர் முறுவல் பூத்ததின் வாயிலாக!
முன்னோர் இடத்தில் -
மிதிலை நகரில் சனகன் அரண்மனையில்
வில்லை வளைக்க எழுந்து கம்பீரமாய் நடக்கும் இராமனை,
"நாகமும் நாகமும் நாண நடந்தனன்" என்பான் கம்பன்.
(நாகம் ஸ்ரீ மலை, யானை).
ஒருவர் நடையை மற்றவர் கண்டு ரசித்துக்
கண்களால் பேசிக் கருத்தை உணர்;த்தும் இந்த
அழகிய கவிதையைக் கம்பன்,
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை படலத்தில் இழைக்கிறான்.
தமிழின்பக் கோட்டைக்கு நம்மை அழைக்கிறான்.
இந்தக் கவிதையின் அடிப்படையில்தான்
கண்ணதாசனின் கவிதை வரிகள்
(ஏற்கனவே இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் காட்டியவை)
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்
போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!
என மலர்ந்தன போலும்.
கம்பனின் இக்கவிதை விதையிலிருந்து முளைத்ததுதான்
இன்னொரு திரைப்பாடலில் வரும் வரி ஒன்று :
பாடல் : மானல்லவோ கண்கள் தந்தது
படம் : நீதிக்குப் பின் பாசம்
வரி : (தேக்கு மரம் உடலைத் தந்நதது)
சின்ன யானை நடையைத் தந்தது.

இப்படி, இப்படி எப்படி வேண்டுமானாலும்
எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம்;தான்.
கண்ணதாசன், தமிழ் இலக்கியங்களில் இருந்தும் ஆங்கில இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாண்ட வரிகளையும் கருத்துகளையும் பற்றிப் பலர் இணையதளங்களில் அவ்வப்பேர்து பதிந்து வைத்திருக்கிறார்கள. அவற்றைப் பற்றி எழுதப் போனால் இன்னொரு கட்டுரையே உருவாகும். அது, இக்கட்டுரையின் நோக்கம் இல்லை! ஆதலால் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்வையைத் திருப்பாமல் (திருப்ப வேண்டும் என்ற சோதiயையும் வெற்றிகரமாகத் தாண்டி) கட்டுரையைக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று.

இறுதியாகச்சொல்ல வேண்டுமென்றால், கம்பன் என்ற காவியக் கவிஞனுக்கும் கண்ணதாசன் என்ற திரைப்படக் கவிஞனுக்கும் இடையே பல விசித்திர ஒற்றுமைகள் உண்டு. வடமொழிக் காவியத்தைத் தழுவித் தித்திக்கும் தேன் தமிழில் எத்திக்கும் புகழ் மணக்க விருந்து படைத்தவன் கம்பன். கண்ணதாசனோ கனகதாரா என்ற வடமொழிப் படைப்பை அழகிய தமிழில் மொழி பெயர்த்தவன். படைப்பு வடமொழியில் என்றாலும் படைத்தவர் தமிழனாகிய ஆதிசங்கரரே. மூலக் கருத்துச் சிதையாமல், கண்ணதாசன் அளிக்கும் பொன் மழையைக் கேளுங்கள் :
' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'.
கண்ணதாசனுக்கு முன்னோர் இலக்கியங்களைக் கையாண்டுப் புழங்கவும் தெரியும் மொழிபெயர்ப்பையே இலக்கியமாகப் படைக்கவும் தெரியும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.

பளிச்சிடும் இன்னோர் ஒற்றுமை : முன்னோர் மொழிகளைப் பொன்னே போல் போற்றி அமுதம் அன்ன அம்மொழிகளைத் தன் வயமாக்கிப் புத்தமுதாய்ப் படைக்குந் திறமை இருவருக்கும் உண்டு. வள்ளுவர் மணிமொழிகளையும் கோதை நாச்சியார் அணிமொழிகளையும் ஆழ்வார்கள் பாசுரங்களையும் படித்து அவற்றில் தான் ரசித்தவற்றைத் தன் படைப்பில் குழைத்துத் தந்தவன் கம்பன். கண்ணதாசனும் அப்படியே! தான் படித்துச் சுவைத்தவற்றைத் தன்வயமாக்கி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் திரைப்படப் பாடல்களில் இழைத்துத் தந்தவன் கண்ணதாசன். (இந்த உவமையைத் தருபவனே கம்பன்தான் :
"கார்உண் வார்சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது" என இராம பாணத்தை, வாலி வதைப் படலத்தில் வருணிப்பான் கம்பன்). மகளிர்பால் மட்டற்ற காதல் இருவருக்கும் உண்டு... பா(டிய)ட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும் என்ற கண்ணதாசனைப் போலவே, மது மயக்கம் கம்பனுக்கும் இருந்திருக்க வாயப்பு உண்டு. (பாலகாண்டத்தில் வரும் உண்டாட்டுப் படலத்தைக் காண்க). இப்படிச் சில ஒற்றுமைகள் இருவருக்கும் இடையே...

இவ்வண்ணம் கண்ணதாசன் கம்பன் வண்ணங்களைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்;த்து உற்றறிந்து உள்வாங்கித் தன் பாடல்களில் பொதிந்தவண்ணங்களைக் கால்வண்ணம் சொல்லி முடித்தேன்! இன்னும் அரை வண்ணம், முக்கால் வண்ணம், முழு வண்ணங்கள் உள்ளன என்று சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்யும் முன்...

முந்திய பகுதியில்,
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி".
எந்தப் படத்தில், என்ன இடத்தில் இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல் என்ன... பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்.

என எழுதி இருந்தேன். இந்த விவரங்;களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி இவற்றை என்னையே தரும்படி ஓர் அன்பர் கேட்டிருந்தார். அடியேன் கேட்டது ஆசிரியர் வகுப்பில் கேட்பது போல அறிவினா இல்லை, ஐயா! இஃது அறியா வினா! இதற்கான விடை எதையும் அடியேன் அறியேன். அதனால்தான் ' அறிந்தோர் கூறினால் பெரிதும் மகிழ்வேன்" என எழுதி இருந்தேன்.

அதே அன்பர் கண்ணதாசனின் இன்னொரு பாடலைக் குறிப்பிடடிருந்தார் :
"'கலாட்டா கல்யாணம்' படத்தில், கண்ணதாசன் பயன்படுத்திய வரிகள்:
"கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதலே அஞ்சும்."
இதனைத்தான் கண்ணதாசன் கம்பனிடமிருந்து கடன்வாங்கி இருந்தார் என்று சொல்லி
"கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்".
என்ற வரியைச் சுட்டிக்காட்டி இருந்தார். இவர் போலவே, பலரும் பல இணைய தளங்களில் இவ்வரியைக் கம்பன் மேல் ஏற்றிக் கூறி இருந்தனர். ஒரு தளத்தில், சிட்ணியிலிருந்து நந்தன் என்பவர்,
"கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்". என்ற அடி கம்பராமாயணத்தில் எந்த இடத்தில் வருகிறது? அப்பாடலின் தொடக்கம் என்ன?... " என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதில் தந்த நண்பர் திரு ஜெயபாரதி,
"அந்தப் பாடல் கம்பராமாயணப் பாடல் இல்லை. அது ஒரு தனிப்பாடல். அதனைப் பற்றிய குறிப்பு ஒன்றைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்திருந்தேன். தேடிப் பாhக்கிறேன்" என எழுதி இருந்தார். பிறகு அவர் விடை தந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கூறியது - 'அது ஒரு தனிப் பாடல்' என்பதும் தவறான விடையே!
இக் கேள்விகளுக்கு விடை தேடி வலைப் பதிவுகளில் புகுந்து வலை வீசிய அன்பர் ஒருவர்,
"அய்யகோ!
வௌ;வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:
(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2) தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.
இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக இருக்கக்கூடுமோ?"
என்ற ஐயப் பாட்டோடு முடித்துக்கொண்டார்.
இவை யாவற்றுக்கும் முடிவு கட்டவே இவ்வளவு நீளமாய் எழுத வேண்டி உள்ளது. முதலில் இப்பாடல் மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் இல்லை, இ;ல்லை, இல்லவே இல்லை. அவ்வளவு ஏன், இந்தப் பாடல் கம்பன் பாடலே கிடையாது. (திரு ஜெயபாரதி சொன்னது போல). இந்த வரி பலரையும் கவர்ந்து இழுத்த காரணத்தால், இத்தகைய வரியைக் கம்பனைத் தவிர வேறே யாரும் பாடி இருக்க முடியாது என்று முடிவு கட்டி விட்டனர். முழுப் பாடலும் யாருக்கும் தெரியவில்லை. இறுதிக் கட்டமாக இவற்றுக்கு எல்லாம் முடிவு கட்ட இதோ முழுப்பாடல் :
இடம்விட்ட மீனைப் போலும் எரிதணல் மெழுகுபோலும்
படம்எடுத் தாடுகின்ற பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம் செருக்க ளத்துற்ற போது
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்

அருணாசலக் கவிராயர் எழுதிய இராம நாடகக் கீர்த்;தனைகள் என்ற நூலில் இடம் பெறுவது இவ்வரி. (இவர் (1712-1779) சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர். அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனைகள் என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. - நன்றி : விக்கிபீடியா). இராம நாடகக் கீர்த்தனைகள் நூலை மதுரைத் திட்டத்தில் கணியகப் படுத்தி உள்ளனர். இனியேனும் இத்தவற்றைத் தமிழ் அன்பர்கள் தவிர்க்க இத்தகவல் உதவும்.

இது போலவே, கண்ணதாசன் எழுதிய வரி ஒன்றைத் தவறாக (க் கம்ப) இராமாயணத்தோடு முடிச்சு போட்டுவிட்டனர். அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் (மறைந்த) ஜெயலட்சுமி பாடுவதாக வரும் "படாஃபட,; என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்" என்ற பாடல் அது. அதில்,
"கோடு போட்டு நிற்கச் சொன்னான்
சீதை அங்கு நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால்
இராமன் கதை இல்லையே" என்ற வரியின் கருத்து (கம்ப) இராமாயணத்தில் வருவதாக மிகப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். தவறு, தவறு, மிகப் பெருந்தவறு. நம்பினால் நம்புங்கள், கம்ப இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி இல்லவே இல்லை!!! காட்சியே இல்லை என்றால், கம்பன் எப்படி இவ்வரிகளை எழுதி இருக்க முடியும்! இத்தகவல் கண்ணதாசனுக்குத் தெரியுமா என்பது பற்றி எந்தத் தகவலும் என்னிடம் இல்லை!!! கம்பனில் இல்லை என்றால் என்ன வால்மீகி எழுதி இருப்பான் என்பவர்களுக்கு ஒரு சொல். இக் கருத்தை நம்பிப் பந்தயம் ஏதும் வைத்து விடாதீர்கள். வைத்தால் தோற்றுப் போவீர்கள். ஆம், வால்மீகியும் இந்தக் காட்சியை வரையவில்லை. துளசி இராமாயணத்திலும் இது கிடையாது. ஆனாலும் 'இலட்சுமணன் கோடு" என்ற சொற்றொடர் புழங்கி வருகிறதே. (அண்மையில் வந்த டாக்டர் இராமதாஸ் அறிக்கையைக் காண்க!). விக்கிபீடியாவும்
"டுயமளாஅயn சுநமாயஇ in அழனநசn ஐனெயைn pயசடயnஉநஇ சநகநசள வழ ய ளவசiஉவ உழnஎநவெழைn ழச ய சரடநஇ நெஎநச வழ டிந டிசழமநn. ஐவ ழகவநn சநகநசள வழ வாந நவாiஉயட டiஅவைள ழக யn யஉவழைnஇ வசயஎநசளiபெ றாiஉh அயல டநயன வழ ரனெநளசையடிடந உழளெநஙரநnஉநள."என்கிறது.

ஆக, புகழ்பெற்ற எந்த இராமாயணத்திலும் இல்லாத இந்தக் காட்சியும் இச்சொல்லாட்சியும் எப்படி வந்திருக்கக்கூடும்? இணைய தளத்தில்; பல நாள்கள் உலாவிய பின் ஓரிடத்தில் ஐயத்துடன் கூடிய விடை கிடைத்தது :
"லட்சுமண் ரேகா என்னும் லட்சுமணன் கோடு, லட்சுமணனால் பர்ணசாலையைச் சுற்றிப் போடப்பட்டு, பின்னர் சீதை அதைத் தாண்டியது போன்ற விபரங்கள் வால்மீகியிலோ, கம்பனிலோ, துளசிதாசரிலோ இல்லை. வழக்கில் இருக்கும் பல ராமாயணங்களில் ஒன்றான "ஆனந்த ராமாயண"த்தில் இது பற்றிக் குறிப்பிடுவதாய்க் "காமகோடி" என்னும் புத்தகத்தில் படித்தேன்." எழுதியவர் திருமதி கீதா சாம்பசிவம். காண்க :
http://groups.google.com/group/nambikkai/browse_thread/thread/272063e0ed847b7c?fwc=1

இந்தியாவில் உலவி வரும் இராமாயணங்கள், இராமாயணக் கதைகள் பலப்பல. அவற்றில் எதில் இந்தக் கதை உருவானதோ! யாரறிவார்? அறிந்தவர் கூறினால் அனைவரும் அறிந்துகொள்ளலாமே!

இதுவரை, கண்ணதாசன் என்ற தற்காலக் கவிஞன் கம்பனைப் படித்து ரசித்துத் தன் திரைப்பாடல்களில் கையாண்டவற்றையும் கம்பன் எழுதியதாக அவன் நம்பிப் பயன்படுத்திய வரிகளையும் ஒப்பிட்டு ரசித்தோம். கம்பன் என்ற கவிச்சக்கரவர்த்தியையும் கண்ணதாசன் என்னும் கவியரசுவையும் பெற்ற நாம் பெருமிதப்படுவதில் தவறே இல்லை!
நன்றி வணக்கம்!- பெஞ்சமின் லெபோ